Saturday, May 06, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 3

முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 3
****************************************


என் அன்புக்குரிய ப்ரீதம்,

கலை நிகழ்ச்சி மேடைகளில் ஏறியவுடன், ஏதோ ஒரு சக்தி உன்னை ஆட்கொண்டதை நான் உணர்ந்திருக்கிறேன். AD-APT என்று அழைக்கப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சி உனக்கு நினைவிருக்கிறதா ? அது, பொருட்களை வித்தியாசமாக, சுவைபட, ஒரிஜினல் விளம்பரங்களை நையாண்டி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாகும். அதில் உன்னுடன் பங்கேற்ற நம் நண்பர்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நிகழ்ச்சியின் விளம்பரக் குரலாக இருந்த, சரீரத்திற்கும் சாரீரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் கணீரென்ற குரல் கொண்ட, கல்லூரியில் இருந்த பெண்களெல்லாம் தங்களது உடன்பிறவாச் சகோதரனாக பாவித்த, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனான 'நாரி' என்ற நாராயணன், "A short man with a high stature" என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்!

'Badoo' என்கிற செல்வராஜ் தான் எவ்வளவு அழகாக சித்திரங்கள் வரைவான்! அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது.

'Vasco' என்கிற வசந்த்குமார், ஒரே சமயத்தில் GRE, TOEFL, GATE, CAT என்று பல தேர்வுகளையும் எதிர்கொண்டு அனைத்திலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்!

GS என்றழைக்கப்பட்ட ஸ்ரீராம், எந்த திரைப்பட பாடலானாலும், கேள்வி ஞானத்திலேயே, அப்பாடலுக்கு அடிப்படையாக அமைந்த கர்னாடக ராகத்தை எளிதில் கண்டுபிடித்து விடுவான். அவன், விகடனின் 'மாணவர் பத்திரிகையாளராக' நம் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவனும் கூட !

ஒரு குழுவாக, நீங்கள் AD-APT-இல் நடித்துக் கலக்கியதை நினைத்துப் பார்த்தால், இன்றும் சிரிப்பு வருகிறது. அந்நிகழ்ச்சியில் டார்ஸான் ஏதோ ஒரு டானிக்கை சாப்பிட்டதால் அவனுக்கு உண்டான உடல் வலிமைக்கு சான்றாக வரும், "When Tarzan farts, the whole jungle stinks" என்ற ஒரு வாசகத்தை கேட்டு அன்று கல்லூரி அரங்கமே அதிர்ந்தது !!!


மற்றொரு கலை நிகழ்ச்சியான MOCK PRESS-இல் (ஒரு பிரபலமான நபரைப் போல் ஒருவர் வேடமேற்று சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய ஒரு பத்திரிகையாளர் குழு கேட்கும் கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்கும் நிகழ்ச்சி அது!) நீ ஒரு முறை கர்னல் கடா·பியாகவும், மற்றொரு முறை சாத்தானாகவும் வேடமேற்று பிரமிக்கத்தக்க வகையில் நடித்து, கேள்விகளை திறமையாக எதிர் கொண்டு அசத்தினாய். நீயும், நடிகர் சத்யராஜ் போலவே நெகடிவ் கேரக்டர்களில் பரிமளித்தவன்! சாத்தானாக நீ மேடையேறியவுடன், பார்வையாளர் மத்தியில் சாத்தானின் பக்தன் போல் நீ செட்டப் செய்திருந்த நண்பன் பாடலிநாதன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, மேடையை நோக்கி விரைந்து உனக்கு சூடம் காட்டி, "ஓ சாத்தானே, எனக்கு அருள் பாலியுங்கள்!" என்று உன்னைப் பணிந்தது பயங்கர கலகலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நீ மேடையில் செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது!

பத்திரிகையாளர் குழுவில் இடம் பெற்ற வேதியியல் ஆசிரியரின் தலையில் நீ கை வைத்து, " Satan bless you!" என்று ஆசீர்வதித்து அவரை மிரள வைத்தாய். அது மட்டுமா, பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருந்த ஜுனியர் மாணவி வந்தனா (அழகும், திறமையும், பணமும் ஒரு சேர அமையப் பெற்றவரிடம் காணப்படும் ஒரு மெல்லிய அகந்தை அவளிடமும் இருந்தது. உனக்கும் கொஞ்சம் ஈகோ உண்டல்லவா? அதனால், you had a love-hate relationship with her) பக்கம் திரும்பி காமப்பார்வையுடன் (உன் நடிப்பைத் தான் சொல்கிறேன், கோபிக்காதே!), "Hi, beauty! What is your name ?" என்று வினவினாய்! பதில் சொல்ல எழுந்த வந்தனாவை, "You are ugly! I was asking the girl next to you!" என்று இடைமறித்து எரிச்சல் கொள்ள வைத்தாய்.

நிகழ்ச்சி முடிந்ததும், வந்தனா எங்களிடம், "He was a bit too much on stage, today!" என்று பொரிந்ததையும், அதற்கு வேதியியல் ஆசிரியர், "No, Preetham was actually three-much, today!" என்று நகைச்சுவையாகக் கூறியதையும், உன் நடிப்புக்குக் கிட்டிய பாராட்டாகவே நான் பார்க்கிறேன்!

நாம் மூன்றாமாண்டு பயில்கையில், இலங்கைப் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அதனால், நம் கல்லூரி நிர்வாகம் விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றியது. சென்னைக்குச் செல்ல விரும்பாமல், நான், நீ, துரைராஜ், ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் ஆகியோர், நண்பன் செல்வராஜுடன் குன்னூருக்கு மேல் அமைந்துள்ள பேலிதளா (Belidala) என்ற அவனது சொந்த கிராமத்துக்கு பயணப்பட்டது உனக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும்.

அப்போது நாம் மேற்கொண்ட வனப்பயணம் (நானும், ராம்ஸ¤ம் சேற்று மணலில் வழுக்கி, ஓர் ஐம்பதடி கீழிருந்த பாறைப் பரப்பில் விழ இருந்தோமே!), நாம் கலந்து கொண்ட செல்வராஜ் (படுகர் இன) இல்லத் திருமணம், நமக்கு அங்கு கிடைத்த உற்சாகமான மரிதையான வரவேற்பு, சைட் அடித்த செல்வாவின் அழகான மாமா/அத்தைப் பெண்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பில் உற்சாக பானங்கள் என்று எல்லாம் சேர்ந்து அது வாழ்வில் நாம் மறக்க முடியாத ஒரு பயணம் ஆனது, இல்லையா !

பொறியியற் படிப்பு முடிந்து, நாம் இருவரும் பெங்களூரில் சிறிது காலம் ஒன்றாகச் சுற்றினோமே, அந்த நாட்களையும் என்னால் மறக்க இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Comments from GCTians are MOST WELCOME !!!

இலவசக்கொத்தனார் said...

நான் ஜி.சி.டி. இல்லை. ஆனாலும் பின்னூட்டம் இடுகிறேன். ஓக்கேதானே.

enRenRum-anbudan.BALA said...

இலவசக்கொத்தனார்,

OK :) THANKS !

நீங்கள் 'பதிவு எப்படி' என்று கூறவில்லையே ?

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails